Saturday 14 June 2014

சின்னாள் ஆகிறியா? பெரியாள் ஆகிறியா?

பால் பருக்கிச் சோறு ஊட்டிவிடத்தான்
பெற்றவர்களால் முடியுமென்பதால்
வேளாவேளைக்கு
பள்ளிக்கூடம் அனுப்புவது
அகரம் தொட்டு
கருவி(ஆயுதம்) வரை படிக்கத்தானே!
என்னதான் இருந்தாலும் பாருங்கோ...
பள்ளிக்கூடம் போனோம் வந்தோம்
படித்தோமோ என்றால் இல்லைப் பாரும்
நீங்கள் அல்ல நான் தான்!
பள்ளிக்கூடக் காலம் முடிஞ்ச பிறகு தான்
வயிற்றுப் பிழைப்புக்கு உழைப்பைத் தேடினால்
வழி நெடுகப் பிச்சை எடுப்பதே
தொழிலானதால்
கண்டதெல்லாம் கண்ணை மூடியே
கற்றுத் தேறியதாலே
நாற்காலித் தொழில் எல்லோ
எனக்குக் கிடைத்தது என்பேன்!
என்னதான் இருந்தாலும் பாருங்கோ...
பள்ளிக்கூடப் படிப்பை
ஒழுங்காகப் படித்து முடித்திருந்தால்
இன்றைக்கு நானோ உலகத்தில் பெரியன்!
கொஞ்சம் நினைத்துத் தான் பாருங்கோ...
பிச்சை எடுக்கையிலே படிக்க முடிந்ததால்
இன்றைக்கு நானோ ஊருக்குள்ளே சிறியன்!
'கல்வி' என்பது
தொடக்க காலத்தில் புளிக்கத்தான் செய்யும்
முற்றிய காலத்தில் இனிக்கத்தான் செய்யும்
பட்டுத் தெளிந்த
என்னைப் போன்றோருக்கு
நன்றாகத் தெரிந்த உண்மை இது!
என் இனிய இளைய நெஞ்சங்களே...
பிஞ்சில படிக்கப் புளிக்குமென
கல்வியை
முளையிலேயே கிள்ள நினைக்காதீர்கள்!
எனது அருமை மாணவிகளே... மாணவர்களே...
என் போன்ற பழுத்த கிழங்கள்
உமக்கு உரைப்பது
தாங்கள் செத்தாலும்
நீங்கள் நல்லாயிருக்கத் தான் பாருங்கோ!
பள்ளிக்கூடம்
படிக்கப் போகும் பிள்ளைகளே...
எட்டாப் பழம் புளிக்குமென
கல்வியை விட்டு எட்ட விலகாதீர்கள்...
என்னைப் போல
நாய்படாப் பாடுபட்டோர்
கதைகள் கேட்டுமா படிப்புக்குப் பின்னடிப்பு!
என்னகாணும் வருங்காலச் செல்வங்களே...
சின்னாள் ஆகிறியா? பெரியாள் ஆகிறியா?
சின்னஞ்சிறு அகவையிலே
முடிவு செய்யுங்கள் - அம்முடிவே
"வினை விதைத்தவன் வினை அறுப்பான்" என்பதை
உங்களுக்கு நினைவூட்டக் காத்திருக்கிறதே!

2 comments:

  1. வணக்கம்

    நன்றாக உள்ளது கவித்துவம் தொடருங்கள்
    வினை விதைத்தவன் வினை அறுப்பான்" என்பதை
    உங்களுக்கு நினைவூட்டக் காத்திருக்கிறதே!
    நல்ல எடுத்துக்காட்டாக கூறிய பழமொழி... சிறப்பு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.